“தாயகம்” இதழில் எனக்கு இருக்கும் அக்கறை இது எப்போதும் கொலைகளை எதிர்க்கும் நிலையில் உள்ளதுதான். ஆனால் கொலைகளை எப்படி அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆழமாகப் பார்க்கத் தவறுவதில்லை. நாம் ஆயிரம் தவங்கள் செய்தாலும், உலகம் கொலைகள் அற்றதாக இருக்கமுடியாது. கொலைவெறியின் சுவை காணும் அரசியல்கள் நிச்சயமாக கொலையாளிகளை உருவாக்குவதில் அக்கறையாக உள்ளன. இந்த வெறித்துவம் இல்லையேல் அரச பதவிகள் கிடைக்காது என அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இவர்கள்தாம் குற்றவாளிகளையும், இவர்களுக்கான தண்டனைகளையும் உருவாக்குகின்றனர் என்பது உண்மை.
கொலைகளின் எதிர்ப்புத்தன்மை கட்சி, இயக்கம், குடும்பம் சாராததாக இருக்கவேண்டும். தனது அண்ணன் கொலை செய்துவிட்டால், அது கொலையே இல்லை, கொலை செய்யப்பட்டவருக்கு துரோகிப் பட்டம் கொடுக்கும் கலையை நாங்கள் ஒவ்வொரு இனக் கலாசாரங்களுள்ளும் காணலாம்.
தமிழ்க் கலாசாரத்தில் கொலைகள் நிச்சயமாகக் கலைகள் போல. “தாழ்” சாதி கொல்லப்படும் கலைகள் இலங்கையின் வடக்குப் பக்கங்களில் நிறைய இருந்தன, இந்தியாவில் இத்தகைய கொலைகள் தினம், தினம். இந்தக் கொலைகளை மேல் சாதிகள் எதிர்ப்பதில்லை. இவைகளுக்கு இவர்கள் எதிராக கூட்டம் போடுவதில்லை, கொடி பிடிப்பதில்லை. அவர்களது ஆத்மாக்களுள் நல்ல சந்தோசம் நிலவும். “தாழ்” சாதிகளும் “மேல்” சாதிகளைத் தட்டியதுண்டு.
இந்த தட்டல் கலாசாரம் மக்களுக்குள் உள்ளன, கட்சிகளுக்குள் உள்ளன, இயக்கங்களுள் உள்ளன, இலக்கிய வாதிகளுக்குள்ளும் உள்ளன. நிறையப் படைப்பாளிகள் கொலைத்துவ வெறி மையை விட்டே எழுதுகின்றனர். Face Book இந்த வெறியர்களைக் காணலாம். இப்போது மயூரனுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை தூக்கிப்பிடிக்கும் எழுத்துகள் முகப்புத்தகத்தில் முளைக்கின்றன. ஆனால், தூக்குத்தண்டனை மனித அடிப்படை இருத்தலின் கொடுமை என்பதை அறிவிக்க சில பக்கங்கள்தாம் உள்ளன. ஆம்! இந்தச் சில பக்கங்கள் பாராட்டுக்குரியன.
மனித கலாசாரத்துள் கொலைத்துவம் உள்ளது. இந்த கொலைத்துவத்தின் காரணிகள் பலவாகும். இந்த உலகு கொலைகள் அற்றதா? இந்த ஜனவரியிலிருந்து 77 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என planetoscope.com தெரிவிக்கின்றது. ஆம்! கொலைகள் இந்த உலகில் நிறைய நடக்கின்றன, நிறையக்காரணங்கள் அவைகளுக்கு உண்டு. அரசியல், சமூகம், மதம், தனிமனித மூளைச் சிக்கல்கள்…. நிறையக் காரணங்கள் உள்ளன.
இலங்கை நாட்டை அழித்தது கொலைகளே. இந்தச் சிறிய தீவில் அரசும், அரசுக்கு எதிரானோரும் இரக்கமின்றி ஆண்களையும், பெண்களையும் கொலை செய்து உள்ளனர். தீவு கொலைத்துவத் தொட்டிக்குள் 30 வருடங்களுக்கு மேலாகத் தவழ்ந்தது. இந்தத் தவழ்ச்சி இந்தத் தீவின் மக்களுக்குள் கொலைப்பிரிவை ஊட்டியிருக்குமா என்பது எனது கேள்வி. இந்தக் கேள்வியை விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு விடுகின்றேன்.
புலிகள்தாம் இலங்கையில் கொலைகளைச் செய்தவர்கள் எனக் குறித்தல் தவறு. அனைத்து இயக்கங்களும் புலிகளைப் போல, புலிகள் பாணியில் கொலைகளைச் செய்துள்ளன. இன்று எனது ஆவணங்களுள் “ஐக்கியத்தின் மறுபக்கம்” எனும் புத்தகம் தெரிந்தது. இது கிட்டத்தட்ட 25 வருடங்களின் முன் ஈரோஸ் இயக்கத்தால் வெளியிடப்பட்ட புத்தகம். (திகதி புத்தகத்தில் எழுதப்படவில்லை) “EPRLF இனரால் கொல்லப்பட்ட எமது தோழர்களின் நினைவாக…” வந்துள்ள இந்தப் புத்தகத்தில் கோரமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கோரம் கொடுமையானது. ஆனால் ஈரோஸ் கொலைகளைச் செய்யாத இயக்கமா? இலங்கைத்தீவில் அனைத்துக் கொள்கைகளை எடுத்தோரும் கொலைத்தேவிக்கு முத்தம் கொடுக்கவில்லை எனச் சொல்லமுடியாது.
புங்குடுதீவில் ஓர் தமிழ் மாணவி கொல்லப்பட்டார். இந்த செயலின் கொரூரத்தை மனிதம் விழுங்குவது சிரமமானது. இந்த இழப்பு கொடுமையானது. இளம் மாணவி, அவளது கனவுகளுள் நிறைய சிறப்பான சிந்தனைகள் இருந்திருக்கலாம். இதுபோன்ற கொலை இப்போதுதான் முதலில் யாழில் நடந்திருக்குதா? பல கொலைகள் வடக்கில் நடந்துள்ளன. இந்தக் கொலைகளின் காரணிகளை விசாரனைகளால்தாம் அறியமுடியும்.
மனிதன் நிச்சயமாக மிருகம். மிருகம் சிந்திக்காமல் கொல்கின்றது எனச் சொல்லப்படுகின்றது. மிருகக் கொலைகளிலும், இவைகளினது வாழ்வியலிலும் சிந்தனை இல்லாதிருக்கும் என்பது என் கருத்து அல்ல. ஆனால், மனிதன் சிந்தித்தே கொல்வான். இந்த மனித சிந்தனை உலகம் நிச்சயமாக நிறைய அழித்தல்களைத் தருகின்றது.
நிச்சயமாக கொலைகளுக்குத் தீர்வு கொலைகள் அல்ல. இது தீர்வானால் கொலைத்துவ அதிகரிப்புகள் பெரிதாகத் தோன்றும். நிச்சயமாக கொலைத்துவம் இல்லாத நீதித்துவம் உலகில் தோன்றவேண்டும்.
You must be logged in to post a comment Login