Recent Comments

    கரு.அழ.குணசேகரனின் இரண்டு கவிதைகள்

    (2014, தனது வீட்டில் இருந்து அன்பளிப்பாக இரண்டு புத்தகங்களைத் தந்தார் எனது இனிய நண்பரான குணசேகரன். இதனுள் அடங்குவது இவரது கவிதைத் தொகுப்பான “புதுத்தடம்”. இந்தத் தொகுப்பு இனியது, சீரியஸ் ஆனது. மதுரையிருந்து சென்னைக்குப் பயணமான ரயிலில்தான் நான் முதல் தடவையாக வாசித்தேன். தெளிவான அழகியலமைப்பால் தமிழ் நிலம் காக்கும் மோசமான நோய்களை எங்களுக்குக் காட்டுகின்றார். இந்தத் தொகுப்பு சமூக அநீதிகளுக்கு எதிரானது. பேராசிரியரது ஆய்வு மாணவனாக இருந்து முனைவர் பட்டம் பெற்றுள்ள சிற்பி ஜெயராமன் அனைத்துக் கவிதைகளுக்கும் அழகிய ஓவியங்களை வரைந்துள்ளார். இந்தக் கவிதைகள் அவருக்கான அஞ்சலிக்காக, “தன்னானே பதிப்பகத்”திற்கு நன்றி சொல்லிப் பிரசுரிக்கப்படுகின்றன. க.கலாமோகன்)

    Kunasekarankavithai

    வெடுக்கு

    அண்மையில்
    ஊருக்குள் உறைபோட்டகிணறு ஒன்று
    பெரிதைப் பேசப்படுகிறது

    ஆழம்
    அகலம்
    இருள்
    வெளிச்சம்
    வட்டம்
    உறை
    தரை
    தண்ணீர்
    ஊருக்குள் உறை போட்ட கிணறு ஒன்று
    பெரிதாய்ப் பேசப்படுகிறது

    கிணறு வெட்டிய வெட்டியான்கள் எல்லோரும்
    மாமன்கள்
    மச்சான்கள்
    தம்பிகள்
    அண்ணன்மார்கள்
    உறவினர்கள்

    கூட்டம் கூட்டமாய்க் கண்டு வந்தோர்
    வாய்நிறையப் பேசினர்
    என் பங்குக்குப் பார்த்துவர
    ஊருக்குள் சென்றேன்

    எங்களுக்கில்லாத உறைகெணறு
    உற்றுப்பார்த்தேன்
    “வெடுக்கு” வீசியது
    விருட்டென்று நடந்து சென்றேன்
    எங்கள் குடியிருப்புக்கு

    (“வெடுக்கு”- துர்நாற்றம் என பேராசிரியர் இந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.)

    kanalகனல்

    ஆண்டைகள் நமக்கு

    இட்டபணிகளை
    சட்டெனச் செய்யாது
    உடல் நோவென
    ஓய்வு கொள்ளச் சென்றதனால்
    சடார் சடாரென
    படார் படாரென
    உதைகள் கொடுத்தனர்

    முதுகுகள்
    தோள்கள்
    உடல்கள்
    காலங்காலமாய்
    சந்ததிகள்பெற்ற
    தண்டனைகள் மறக்கலாமா
    காலங்காலமாய்
    நீ பட்ட துயரங்கள்
    மறக்கலாமா

    அந்த ஆலமரத்தில்
    கம்புகள் செய்து
    இந்த அரசமரத்தில்
    பிரம்புகள் செய்து
    சடார் சடாரென
    படார் படாரென
    உதைகள் கொடுத்தனர்
    உரைகள் அளித்தனர்
    உன்னுள் ஒளித்து வைத்துள்ள
    தீக்கங்குகளை நெருப்பாக்கு
    உன்னுள் புதைத்து வைத்துள்ள
    ஆத்திரக் கனல்களைக் குறியாக்கு
    உனது சீரும் குரல்களை
    உனது வைரத்தோள்களை
    வீறுகொள்ளச் செய்
    நீ
    உறங்கிய காலங்கள்
    யோசித்த நாட்கள்
    போதும்

    புதைக்கப்பட்ட மூதாதைகளின்
    பெருமூச்சுக் கனல்களை
    இரவல் வாங்கு
    இரவைப் பகலாக்கு

    அதோ! அந்த
    காடு கரைகளில்
    வேலிக்காத்தான்கள்
    காவல் காத்து நின்ற
    கத்தாழை இதழ்களை
    கைநிறைய எடுத்துவந்து
    கட்டையால் அடித்து
    பஞ்சு பஞ்சாய்
    மஞ்சி நூல்கள் எடுத்து
    வெய்யிலிலே காயவைத்து
    முறுக்கலான கயிறு திரித்து
    சாட்டை செய்து
    நீ கொடுத்தாய்
    வேலைக்கேற்ற கூலி இல்லை
    ஆளைப்பார்த்துக் கூலி குறைத்தார்.
    கூலியைக் கொறைக்காதீங்க
    பிள்ளைகுட்டி தாங்காதுங்க
    கெஞ்சிக்கேட்டவர்க்கு
    ஆண்டை தந்த பரிசென்ன?

    சுளீர் சுளீரென
    பளீர் பளீரென
    சாட்டையடிபெற்றவர்கள்
    சாய்ந்தார் மடிந்தார்

    நீயும் உன் பரம்பரையும்
    உறங்கிய காலங்கள்
    யோசித்த நாட்கள்
    போதும்

    புதைக்கப்பட்ட மூதாதைகளின்
    பெருமூச்சுக் கனல்களை
    இரவல் வாங்கு
    இரவைப் பகலாக்கு

    மாடுபோடும்
    சாணங்களைக்
    கரைத்து வைத்து
    சாணிப்பாலைக்
    குடிக்கச் செய்தார்கள்
    ஆர்ப்பரித்தார்கள்
    தீண்டாமைக்
    கொடுமை செய்தார்கள்

    விதவிதமாய்த் தண்டனைகள்
    விதித்து வளர்ந்த கூட்டம்
    வேரோடும் மண்ணோடும்
    களைந்தெறிய வேண்டாமா
    களை நீங்க வேண்டாமா
    மௌனங்கள் உமக்கு வேண்டாம்
    கண்ணீர் கதைகள் இனியும் வேண்டாம்
    உயிர்த்தெழுந்த
    கதை கேட்டும்
    உறக்கம் நமக்கு வேண்டாம்

    புதுமழை பெய்கிறது
    பருவம் துளிர்கொள்கிறது
    நிலம் உழுதுபயிர் செய்வோம்
    புதிய விதை விதைத்திடுவோம்
    உழைப்பினில் திளைத்திடுவோம்
    அறுவடைக்குக் காத்திருப்போம்
    அனைத்தும் நமக்காக்கிடுவோம்

    Postad



    You must be logged in to post a comment Login