நிலவு காலம்!
நள்ளிரவு.
நிசப்தம் கலைத்து
நித்திரை குலைத்து
நாய்கள் குலைக்கும்.
பயிர்கள் பிடுங்கி
புற்கள் நிறைந்த தோட்டத்திற்குள்
கூடி நின்று
ஊளையிடும்.
திருடர்…
பேட்டைக்குள்
நுழைந்த அந்நிய நாய்கள்…
ஆவிகள்…
உயிர் பறிக்க வரும்
எமன்…
முதுகில் லாண்ட் பண்ணும்
வைரவர்…
காரணம் எதுவுமே
இல்லாமலும்
இருக்கக் கூடும்.
காரணம் தெரியாமலே
ஊரில் உள்ள
மற்ற நாய்கள் எல்லாம்
கோடிக்குள் நின்று நிலைக்கும்
இன ஒற்றுமை காட்டி!
ஊளையிட்டு முடிந்து
முன்காலை மடித்து
தலையை நீட்டி
நாடியை நிலத்தில் வைத்து
கண்ணை மூடி
அனுங்கும்!
மே 18…
மாவீரர் தினம்…
இடையில் யாராவது
உண்மையைச் சொன்னால்…
ஊளையிட்டு முடிந்து
முன்காலை மடித்து
தலையை நீட்டி
நாடியை நிலத்தில் வைத்து
கண்ணை மூடி
அனுங்கும்!
தேசியக் கடமையை
முடித்த பெருமையுடன்!
You must be logged in to post a comment Login