பூசணி வகை, கன்ரலூப், மெலன் பழ வகைகளின் விதைகளை நாங்கள் பொதுவாகவே எறிந்து விடுகிறோம். ஆனால் அவற்றில் உள்ள சத்துக்களை அறிந்து கொண்டோம் என்றால்…
இந்த விதைகளில் நார்ப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. இது சமிபாட்டிற்கு மிகவும் உதவுவதுடன், வயிறு நிறைந்திருப்பதான உணர்வை ஏற்படுத்தும். எனவே நாங்கள் சாப்பிடும் மாப்பொருளின் அளவு குறைய… பிறகென்ன? தொப்பை தானாய் குறையும்.
இதை விட, இந்த விதைகளில் புரதம் உண்டு. சோயாவில் உள்ளது போன்றே இந்த விதைகளில் புரதம் உண்டு. புரதத்திற்காக இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதைக் குறைத்து, இந்த தாவரப் புரதத்தை உண்ணலாம்.
அத்துடன், விற்றமின் ஏ, சி மட்டுமன்றி, நாகம், பொஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் உண்டு.
இவையெல்லாம் உங்கள் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுவன.
இந்த விதைகளை கொஞ்சம் ஒலிவ் எண்ணெய் விட்டு, தகரத் தட்டொன்றில் பரவி, 200 பாகையில் சூடாக்கிய அடுப்பில் மெதுவாக காய விடுங்கள். பொன் நிறம் வரும்வரைக்கும் காய விட்டு, பின்னால் தேவையான அளவு உப்புடன் கலந்து… டிவி பார்க்கும் போது எதையாவது கடிக்க வேண்டும் போல் தோன்றும்போது, கொறியுங்கள்.
வீணாய் போவதைப் பயன்படுத்துவதும் ஆகிறது. உடல் நலத்திற்குப் பயன் படுவதும் ஆகிறது.
விதையில் உள்ள சத்துக்களைப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று விதைகளை எடுத்து விட்டு, பூசணிக்காயையோ, மெலன் பழங்களையோ வீசாதீர்கள். சுவடியில் விதையைத் தான் சாப்பிடச் சொல்லிப் போட்டுக் கிடந்தது என்று எங்கள் மீது பழியைப் போடாமல், அவற்றையும் தான் உண்ணுங்கள். அவற்றிலும் நிறையச் சத்துக்கள் உள்ளன.
சுவடி மாசி 2015
You must be logged in to post a comment Login